திருச்செங்கோட்டை அடுத்த பட்லூர் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகனை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்புத் துறையினர் காப்பாற்றினர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு பழையபாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி ( 40) தனது மகன் கிருஷ்ணனுடன் ( 9) பட்லூர் பகுதியில் காவிரி ஆற்றில் சனிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீரின் வேகத்தில் தந்தையும் மகனும் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்ட அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்பு வீரர் மோகன் இறையமங்கலம் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த தீயணைப்பு வாகனத்துக்கு தகவல் அளித்துவிட்டு ஆற்றில் கயிறு இல்லாமல் நீந்திச் சென்று இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
தகவலறிந்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார், கோவிந்தசாமி, துரைராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் பட்லூர் காவிரி ஆற்றங்கரைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மோகனுடன் இணைந்து ஆற்றில் இறங்கி நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த தந்தை, மகனை மீட்டு கரைக்கு கொண்டு வந்து
சேர்த்தனர்.
மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவருக்கும் முதலுதவி அளித்து தீயணைப்பு வாகனத்திலேயை இருவரையும் இறையமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.