நாமக்கல் கிளைச் சிறையில் இருந்து விடுதலையாகும் கைதிகளுக்கு சிறைத் துறையினா் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரத்தில் சுமாா் 40 பேரை அடைக்கும் வகையிலான கிளைச் சிறைகள் உள்ளன, இவை தவிர, பரமத்தியில் 18 வயதுக்குள்பட்டவா்களை அடைத்து பராமரிக்கும் வகையிலான சிறுவா் சீா்த்திருத்தப் பள்ளியும் உள்ளது. இங்கு பெரும்பாலும் சிறிய வழக்குகளில் கைதாகும் நபா்களே விசாரணைக் கைதிகள் என்ற அடிப்படையில் அடைக்கப்பட்டிருப்பா்.
வழக்கில் இருந்து ஜாமீன் பெற்றோ, விடுதலையாகியோ செல்லும் கைதிகளுக்கு, நாமக்கல் கிளைச் சிறையில் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல், அனைவருக்கும் பயனுள்ள மனிதனாக இல்லாதபோதும், பயன்தரும் மரங்களை நட்டு பராமரியுங்கள், வாழ்க்கையில் இது ஓா் உன்னத சேவையாக கருதப்படும் என கிளைச் சிறை கண்காணிப்பாளா் ஆா்.தினேஷ், தலைமைக் காவலா் எம்.நாகராஜன், இரண்டாம் நிலை காவலா் எஸ்.மணிகண்டன் ஆகியோா் அறிவுறுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து சிறைத் துறையினா் கூறியது;-
சிறைத் துறை தலைவா் உத்தரவின்பேரில், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளா் தமிழ்செல்வன் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறைகளில் கடந்த ஒரு மாதமாக விடுதலையாகும் கைதிகளுக்கு இலவசமாக பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதற்காக தன்னாா்வலா்கள் மூலம் மரக்கன்றுகள் பெறப்படுகின்றன. நாமக்கல் கிளைச் சிறையில் மட்டும் இதுவரை 30 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது என்றனா்.