வாக்குச் சாவடி குழுக்களை அமைத்து கட்சியை வலுப்படுத்துவது என்று ராசிபுரம் நகர அமமுக முடிவு செய்துள்ளது.
ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனின் வழிகாட்டுதல்படி கட்சிப் பணிகளை மேற்கொள்ளுதல், புதிய உறுப்பினர் சேர்க்கை, திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் கட்சி பணியாற்றுவது உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்துக்கு நகரச் செயலர் வி.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி பாஸ்கரன் வரவேற்றார்.
கட்சியின் அவைத் தலைவர் எஸ்.அன்பழகன், மாவட்டச் செயலர் பி.சம்பத்குமார், ஜெயலலிதா பேரவையின் மாநில இணைச் செயலர் ஏ.பி.பழனிவேல், வர்த்தகர் அணியின் மாநில இணைச் செயலர் கே.ஆர்.நல்லியப்பன், எம்ஜிஆர் மன்றத்தின் மாவட்டத் தலைவர் வி.திருப்பதி, மாவட்ட இணைச் செயலர் திலகம், அக்ரி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.