குமாரபாளையத்தை அடுத்த பல்லக்காபாளையத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 123 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இம்முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்துப் பேசுகையில், கிராம மக்களுக்கும் அரசின் திட்டங்கள், செயல்படுத்தப்படும் விதம், அதனைப் பெறும் வழிமுறைகள் சென்றடைய வேண்டும் என இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது.
விவசாயிகள் அதிகமுள்ள மாவட்டமான நாமக்கல்லில், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், இடுபொருள்கள், விதைகள், மரக் கன்றுகள், சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து குறைந்த நீரில் நிறைந்த மகசூலை பெறலாம்.
வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க தேவையான ஆலோசனைகள், உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அரசின் அனைத்து திட்டங்களையும், சலுகைகளையும் பொதுமக்கள் முழுமையாக பெற்று வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.
இம்முகாமில், 123 பயனாளிகளுக்கு ரூ.6.02 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ், வேளாண்மை இணை இயக்குநர் சேகர், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் வி.பி.பொன்னுவேல், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், குமாரபாளையம் வட்டாட்சியர் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.