நாமக்கல் மாவட்டம், மோகனூர் காளியம்மன், மாரியம்மன், செல்லாண்டியம்மன், நாவலடிகருப்பண்ணசுவாமி மற்றும் விநாயகர் கோயில் மகா கும்பாபி ஷேக விழாவானது, கடந்த ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வரும் 16 மற்றும் 17 தேதிகளில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) காலை 7 மணிக்கு காளியம்மன் கோயிலில் மங்கள இசையுடன் விழா
தொடங்குகிறது.
தொடர்ந்து விநாயகர் வழிபாடு, சங்கல்பம், மகா கணபதி யாகம், பூர்ணாஹூதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் காளியம்மன் கோயிலில் மகா சண்டியாக பூர்வாங்க பூஜை, முதல் கால சண்டியாகம், நாவலடியான் கோயிலில் விநாயகர் வழிபாடு, யஜமான சங்கல்பம், முதல் கால 108 கலச பூஜை
நடைபெறுகிறது.
அதன்பின், இரவு 8 மணிக்கு முதல் கால யாக பூர்ணாஹீதி, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படவுள்ளது.
மாலை 6 மணிக்கு கோயில் தல வரலாறு குறுந்தகட்டை வெளியிட்டு, இல்லறம் சிறக்க மதுரையா, சிதம்பரமா, என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது. இரண்டாம் நாள் 17- ஆம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணிக்கு அசலதீபேஸ்வரர் கோயில் அருகே காவிரி ஆற்று படிக்கட்டுத் துறையில் இருந்து தீர்த்தக்குடம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைகிறது.
இதனைத் தொடர்ந்து, காலை 7 மணிக்கு நாவலடி கருப்பண்ணசாமி மற்றும் மாரியம்மன் கோயிலில் விநாயகர் வழிபாடு, புண்யாகம், இரண்டாம் கால 108 கலச பூஜை, யாகபூஜை, மகா பூர்ணாஹூதியும், ஸ்ரீ நாவலடி கருப்பண்ண சுவாமிக்கு 108 கலச அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு காளியம்மன் கோயிலில் இரண்டாம் கால மகா சண்டி யாகம், 13 அத்யாய தேவதைகள் யாகம், மங்கள திரவிய ஹோமம், கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை நடைபெற்று, மதியம் 12 மணிக்கு மேல் மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கலச அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறு பிரசாதம் வழங்குதல் நடைபெற உள்ளது. அன்று இரவு முதல் திங்கள்கிழமை மதியம் வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ நாவலடி கருப்பண்ணசுவாமி, காளியம்மன், மாரியம்மன் கோயில் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் குழு மற்றும் மணியன் குல கண்ணந்த குல குடிப் பாட்டு மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.