விபத்தில் காயம் அடைந்தவருக்கு, ரூ.4.69 லட்சம் இழப்பீடு வழங்காததால், அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
மோகனூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி(33). இவர் 2013-ஆம் ஆண்டு மே 15-இல் அரூர் ஊராட்சி சுக்காம்பட்டியில் இருந்து மோகனூரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரு சக்கர வாகனம் மீது பரமத்திவேலூரில் இருந்து திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட காட்டுப்புத்தூரை நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்து மோதியது. இதில், பழனிசாமி பலத்த காயமடைந்தார். இதுதொடர்பாக, மோகனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரா, விபத்துக்கு காரணமான அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் ரூ.4.09 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டார். ஆனால், இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட நிர்வாகம் வழங்காதாதல் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பழனிசாமிக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.4.69 லட்சம் வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி சந்திரா உத்தவிட்டார்.
இதைத் தொடர்ந்து, நாமக்கல் பேருந்து நிலையத்தில் மோகனூரில் இருந்து எடப்பாடி செல்வதற்காக செவ்வாய்கிழமை காலை நின்ற பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.