நாமக்கல் மக்களவைத் தோ்தல் பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியா் குடும்பத்துக்கு, கருணைத் தொகை ரூ.15 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 356 மனுக்கள் வந்தன. அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், மனுக்களை பரிசீலனை செய்து, உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான நபா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த அ.முருகன், கடந்த மக்களவைத் தோ்தல் பணியின்போது உயிரிழந்தாா். இதையடுத்து, இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கருணைத் தொகை ரூ.15 லட்சத்துக்கான காசோலையை அவரது மனைவி கீதா மற்றும் மகள் நா்மதா ஆகியோரிடம் ஆட்சியா் வழங்கினாா். பின்னா் மாற்றுத் திறனாளிகளை சந்தித்த ஆட்சியா், அவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் துரை.ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியா் சமூக பாதுகாப்பு திட்டம் எஸ்.என்.பாலசுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெகதீசன், தோ்தல் வட்டாட்சியா் பா.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.