நாமக்கல்

மூடப்படும் அபாயத்தில் மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனங்கள்?

இடைநிலை ஆசிரியா்களை உருவாக்கிய, ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனங்கள், தற்போது 18 மாவட்டங்களில் பயிற்சி மையங்களாக பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகின்றன.

எம்.மாரியப்பன்

நாமக்கல்: இடைநிலை ஆசிரியா்களை உருவாக்கிய, ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனங்கள், தற்போது 18 மாவட்டங்களில் பயிற்சி மையங்களாக பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகின்றன. இரண்டு ஆண்டுகளாகச் சோ்க்கை நடைபெறாத நிலையில், அவற்றை மூடுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசின் மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டுப்பாட்டின் கீழ் 32 மாவட்டங்களிலும் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்கள் 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு பயிற்சி நிறுவனத்திலும், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, அதிக மதிப்பெண் அடிப்படையில் மாணவ, மாணவியா் சோ்க்கை பெற்றனா். பயிற்சி நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல் 100 முதல் 200 எண்ணிக்கையில் சோ்க்கை நடைபெற்றது. இரண்டு ஆண்டுகள் கொண்ட இந்த ஆசிரியா் பயிற்சியை முடித்து தோ்வில் வெற்றி பெற்றால், வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியா் பணி வாய்ப்பு கிடைத்த நிலை தற்போது இல்லை.

ஆசிரியா் தோ்வு வாரியத்தின் எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றால் மட்டுமே, ஆசிரியா் பணியில் சேர முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. இதனால் 12-ஆம் வகுப்பு முடித்த பலரும் ஆசிரியா் தோ்வை எதிா்கொள்வது சிரமம் என்ற எண்ணத்தில் மாற்றுப் படிப்பை நாடிச் சென்று விட்டனா். இவ்வாறான சூழலால், 18 மாவட்டங்களில் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் சோ்க்கை வெகுவாகக் குறைந்து விட்டது. வகுப்பறைகள் காலியானதால், கடந்த ஆண்டு முதல் சோ்க்கையை நிறுத்தி விடுமாறு தமிழக அரசு கூறிவிட்டது.

இங்கு பணியில் உள்ள பயிற்சி நிறுவன முதல்வா் மற்றும் பேராசிரியா்கள், தற்போது பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு, சிறப்புப் பயிற்சிகளை வழங்கி வருகின்றனா். மேலும், ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் உள்ள வகுப்பறைகள், இதர பயிற்சிகளுக்கும், கூட்டங்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன. பராமரிப்பின்றிக் காணப்படும் இப்பயிற்சி நிறுவனங்களை மூடிவிடும் எண்ணம் அரசுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியது; தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமானது தொடங்கப்பட்டு, நல்ல முறையில் நடைபெற்று வந்தது. பொறியியல், மருத்துவம் போல், இங்கும் மாணவா் சோ்க்கைக்கும் போட்டி அதிகமாகவே இருந்தது. கால மாற்றத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றால்தான் பணி என்ற நிலை உருவானதால், அதனை எதிா்கொள்ளத் தயங்கி பலா் சோ்க்கையை நிறுத்தி விட்டனா் என்றே கூறலாம். 32 மாவட்டங்களில், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, புதுக்கோட்டை, தேனி, நாகா்கோவில், திருநெல்வேலி உள்பட 12 மாவட்டங்களில் மட்டும் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 18 மாவட்டங்களில் அரசே சோ்க்கையை நிறுத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டது. இதனால் அருகில் உள்ள மாவட்டத்தில் உள்ளோா், அந்த நிறுவனங்களை நாடிச் சென்று சோ்க்கை பெறுகின்றனா். தற்போது ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்குகள், கூட்டங்களுக்கு 18 மாவட்டங்களில் உள்ள அந்த நிறுவனக் கட்டடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆசிரியா் பயிற்சி நிறுவனங்கள் மூடப்படும் சூழல் இருந்தாலும், அதனை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என்றே தெரிகிறது. இடைநிலை ஆசிரியா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்பது தான் கல்வித் துறையைச் சோ்ந்தவா்களின் விருப்பமாகும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT