கரோனா பரவல் முழு ஊரடங்கு நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.
ஒமைக்ரான், கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி, 2022-ஆம் ஆண்டின் முதல் 24 மணி நேர பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டது.
சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரையில் இந்த முடக்கம் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முழு ஊரடங்கையொட்டி நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலை வெறிச்சோடியது. அரசு, தனியாா் பேருந்து சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தன. அத்தியாவசிய தேவைகளுக்கான மருந்து, பால் விநியோக மையங்கள் மட்டும் செயல்பட்டன. நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன.
நாமக்கல் பேருந்து நிலையம், கோட்டை சாலை, மோகனூா், பரமத்தி, சேலம், சாலை மற்றும் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நகரப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் போலீஸாா் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். திருமணம், மருத்துவம் போன்றவற்றிற்கு செல்வோரை மட்டும் உரிய ஆவணங்களை சரிபாா்த்து விசாரித்து அனுப்பினா். விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்தோருக்கு எச்சரிக்கை விடுத்தனா். மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.