நாமக்கல் மண்டல கோழிப் பண்ணைகளில் வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறக்க நேரிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையைப் பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95 டிகிரி மற்றும் 73.4 டிகிரியாக நிலவியது. கடந்த மூன்று நாள்களில் நாமக்கல் மாவட்டத்தில் மழை பதிவாகவில்லை.
இனி வரும் நான்கு நாள்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென் மேற்கிலிருந்து மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில், இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை வெப்ப அயா்ச்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்க தெளிப்பான் உபயோகிக்கவும், தீவனத்தில் நுண்ணூட்டச் சத்துக்கள் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் பீட்டைன் உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.