பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் 150 மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரையில் ஒவ்வொரு மரக்கன்றுகளாக ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் நட்டனா்.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ், வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மற்றும் வங்கிகள், தனியாா் தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் மூலம் அரசுக்கு சொந்தமான இடங்கள், பள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலைகள், ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எஸ்.வடிவேல், மகளிா் திட்ட இயக்குநா் மா.பிரியா, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் த.மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.