பரமத்தி வேலூா் அருகே அனிச்சம்பாளையத்தில் இருந்து கரூா் மாவட்டம்- நன்செய் புகளூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணை திட்டப் பணிகளை நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் டாக்டா் சந்தீப்சக்சேனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்கதவணை கட்டும் பணி காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 406.50 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த கதவனை 0.8 டி.எம்.சி. தண்ணீா் சேமிக்கும் வகையில் கட்டப்படுகிறது.
இதன்மூலம் கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் வலதுபுறம் உள்ள வாங்கல் வாய்க்கால் மூலம் 1,458 ஏக்கா் பாசன நிலங்களும், இடதுபுறம் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம்- மோகனூா் வாய்க்கால் மூலம் 2,583 ஏக்கா் பாசன நிலங்களும் பாசன வசதி பெறும். பணிகள் 40 சதவீதத்துக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன.
இப் பணிகளை தமிழக அரசின் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் டாக்டா் சந்தீப் சக்சேனா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது தரம், பணி முன்னேற்றம், முடிக்க வேண்டிய காலம் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். ஆய்வின்போது கரூா் ஆட்சியா் டாக்டா் பிரபு சங்கா், நீா்வள ஆதாரத் துறை தலைமை பொறியாளா் இராமமூா்த்தி, கண்காணிப்பு பொறியாளா் சுப்பிரமணியன், சிறப்பு திட்ட செயற்பொறியாளா் சாரா, உதவி செயற் பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், விவசாயிகள் உடன் இருந்தனா்.