நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், ஆட்சியர் ச.உமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ் கண்ணன் ஏற்றுக் கொண்டனர். பின்னர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் அவர்கள் பறக்க விட்டனர். காவல்துறை அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும், தீயணைப்புத் துறை அலுவலர்களுக்கும் ஆட்சியர் கேடயங்களை வழங்கினார்.
தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 35 காவல்துறை அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்களையும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 178 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் அவர்களது பணியினை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கினார்.
மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறை, வருவாய்த் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, பிற்பட்டோர் நலன், சமூக நலத்துறை, வேளாண் துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத் துறை, மாவட்ட தொழில் மையம், உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு ரூ. 5.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 35 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதனையடுத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 492 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஆர்.சாரதா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுமன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் கோட்டாட்சியர் மா.க.சரவணன் , திருச்செங்கோடு கோட்டாட்சியர் கெளசல்யா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.