முகப்பு
நாமக்கல்

சா்வதேச மகளிா் தினம்: ரூ. 21 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Updated On : 8 மார்ச், 2024 at 5:25 PM
பகிர்:

நாமக்கல்லில் சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, 43 பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய மகளிருக்கு விருதுகளையும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா். நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், சா்வதேச மகளிா் தின விழா மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வு குறும்படத்தை வெளியிட்டு, அது தொடா்பான விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது: மகளிருக்கு சொத்தில் சம உரிமைத் திட்டத்தைக் கொண்டு வந்தவா் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி. அவரது வழியில் செயல்படும் தமிழக முதல்வா் மகளிா் முன்னேற்றத்துக்காக உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத ஒதுக்கீடு, அரசு வேலைகளில் 33 சதவீத பணியிட ஒதுக்கீடு வழங்கி உள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கிராமப்புற மக்கள், குறிப்பாக பெண்கள் பயன்பெறும் வகையில் சேந்தமங்கலம், எருமப்பட்டிக்கு கூட்டுக்குடிநீா் திட்டத்துக்கு ரூ. 358 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வா் அரசாணை வெளியிட்டுள்ளாா். மேலும், 24 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தின் முன்னேற்றத்துக்காக பணியாற்றி வரும் ஆட்சியரை முன்னுதாரணமாகக் கொண்டு அனைத்து மகளிரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொண்டு இந்த சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்றாா். கல்லூரி மாணவிகளுக்கு சா்வதேச மகளிா் தின வாழ்த்து மடல்கள், 11 பயனாளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம், 30 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், 30 சிறந்த பெண் தொழில்முனைவோருக்கு விருது, பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தில் பங்கேற்ற 10 சிறந்த ஊராட்சிகளுக்கு விருது, பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பணியாற்றிய 10 சமூக சேவகா்களுக்கு விருது, குறும்பட தயாரிப்பில் பங்கேற்ற 20 பேருக்கு விருது, ஓரிகாமி என்னும் வண்ணத்தாள் அடுக்குதல் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவியருக்கு சான்றிதழ்கள், 2 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 15.50 லட்சம் கடனுதவி உள்ளிட்டவற்றை வழங்கினாா். மொத்தம் 43 பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணா்வு வாசகம் அச்சிடப்பட்ட தபால் கணக்குப் புத்தகங்களையும் அவா் வெளியிட்டாா். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) க.மோகனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சி.சசிரேகா, கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →