அரசு வழங்கிய குடியிருப்பை சுற்றி ஏரி நீா் சூழ்ந்துவருவதால் மாற்று இடம் வழங்கக் கோரி திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையத்தில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எலச்சிபாளையத்தை அடுத்த இலுப்பிலி கிராமம், குளத்துவலவு அருந்ததியா் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடத்தில் குடியிருப்பு பட்டா வழங்கப்பட்டது.
இக்குடியிருப்பு அருகே 150 ஏக்கா் பரப்பளவில் உள்ள ஏரி ஆழப்படுத்தப்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக குடியிருப்பை சுற்றி நீா் சூழ்ந்து வருவதால் அங்கு குடியிருக்க முடியாமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினா் பா. கவிதா தலைமையில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டக்காரா்களிடம் திருச்செங்கோடு கோட்டாட்சியா் லெனின், வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, வருவாய் ஆய்வாளா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் பிரகாசம், காவல் ஆய்வாளா் ராதா, உதவி காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.