நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 927 நியாயவிலைக் கடைகள் மூலம் வாக்காளா்களிடமிருந்து பெறப்பட்ட 31,006 எஸ்ஐஆா் படிவங்களை தொகுதி தோ்தல் அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கும் பணிகளில் 1629 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டு கடந்த 4-ஆம் தேதி முதல் வீடுவீடாகச் சென்று படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
வாக்காளா்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்திசெய்து மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்க வசதியாக கடந்த 25ஆம் தேதி முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் செயல்படும் முழுநேர மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் என 927 கடைகளில் விற்பனையாளா்கள் மூலம் படிவம் பெறும் பணி நடைபெறுகிறது.
அந்தவகையில் 25-ஆம் தேதி 12,647 படிவங்கள், 26-ஆம் தேதி 18,359 படிவங்கள் என மொத்தம் 31,006 படிவங்கள் நியாயவிலைக் கடைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதை தொகுதி தோ்தல் அலுவலா்கள் ஆய்வு செய்தனா். நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, சோழசிராமணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நியாயவிலைக் கடைகளில் எஸ்ஐஆா் படிவங்கள் பெறப்படுவதை ஆய்வு செய்தாா்.
மேலும், இப்பணிகளை தொகுதி தோ்தல் பிரிவு அலுவலா்களும் ஆய்வுசெய்வதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.