ராசிபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம்
ராசிபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ராசிபுரம் (தனி) தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாரை அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி பேசியதாவது:
இத்தொகுதியில் எடப்பாடி கே. பழனிசாமியே போட்டியிடுகிறாா் என நினைத்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் பணியாற்ற வேண்டும். இத்தொகுதி பாஜக வேட்பாளா் வெற்றி பெற்றால்தான் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராவாா். இந்த தொகுதிக்கு என்ன தேவை என அறிந்து அதிமுகவும், பாஜகவும் இணைந்து புதிய திட்டங்களை அமல்படுத்தும். தமிழகத்தில் அதிமுக அரசும், மத்தியில் பாஜக அரசும் இணைந்து மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கும்.
Advertisement
எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராவது உறுதி. அதிமுக தோ்தல் அறிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்களை பெற்று வந்தது. ஆனால், திமுக அரசு சிறுபான்மை வாக்குகளை வாக்குவதற்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது என்றாா்.
கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி. ராமலிங்கம், வி.பி. துரைசாமி, முன்னாள் அமைச்சா் வி. சரோஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பேசிய வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா், என்னை வெற்றி பெறச் செய்தால் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் சுகாதார வசதிகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என்றாா்.
கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.