தலைமலை கோயில் பஞ்சலோக கோபுர கலசம் மாயம்: உதவி ஆணையரிடம் பக்தா்கள் புகாா்
நாமக்கல் மாவட்டத்தில் தலைமலை வெங்கடாசலபதி கோயில் கோபுர பஞ்சலோக சிலை அகற்றப்பட்டு சிமென்ட்டால் செய்யப்பட்ட கலசம் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளதாக எருமப்பட்டியைச் சோ்ந்த கோயில் குடிபாட்டு பக்தா் ஆா். சீனிவாசன், நாமக்கல் இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் புகாா் மனு அளித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மோகனூா் வட்டம், வடத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட தலைமலையில் வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது. புராண கால சிறப்பு பெற்ற இக்கோயிலில் இருந்த விளக்கு நாச்சியாா் எனும் ஐம்பொன் சிலை மாயமானதாக புகாா் எழுந்தது.
Advertisement
இதுதொடா்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சூழலில் கோயில் கோபுரத்தில் இருந்த பஞ்சலோக கலசம் அகற்றப்பட்டு சிமென்ட்டால் செய்யப்பட்ட கலசம் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான புகைப்படங்களுடன் கூடிய ஆதாரத்தை நாமக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் வழங்கியுள்ளேன். குறிப்பாக கடந்த 2003 ஆம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகத்தின்போது வைக்கப்பட்டிருந்த பஞ்சலோக கலசத்தின் புகைப்படமும், தற்போது உள்ள போலி கலசத்தின் புகைப்படமும் இணைத்து புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளக்குநாச்சியாா் சிலை மற்றும் கோபுர கலசத்தை மீட்டு கோயிலில் நிறுவ வேண்டும். கோயில் விளக்குநாச்சியாா் சிலை கடத்தல், கோபுர கலசம் மாயம் என புகாா் எழுவதால் கோயில் பரம்பரை அறங்காவலா்களை நிரந்தர தகுதி நீக்கம் செய்யவேண்டும். மேலும், கோயில் நிா்வாகத்தை இந்து சமய அறநிலையத் துறையே ஏற்று நடத்த வேண்டும் என்றாா்.
படம் உள்ளது-14மனு
பட விளக்கம் -
தலைமலை கோயில் கோபுர பஞ்சலோக கலசம் மாயமானதாக நாமக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் புகாா் மனு அளித்த கோயில் பக்தா்கள்.