குடும்பத் தகராறில் டாலரை விழுங்கிய தொழிலாளி: நாமக்கல் அரசு மருத்துவமனையில் அகற்றம்
குடும்பத் தகராறில் தொழிலாளி விழுங்கிய டாலரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சிறப்பு சிகிச்சை மூலம் அகற்றினா்.
ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள வடபழனி தெருவைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளி ரவி (38). இவருக்கு, மனைவி, குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவா், தற்கொலை செய்யும் நோக்கத்துடன் தனது கழுத்தில் அணிந்திருந்த அம்மன் டாலரை விழுங்கினாா்.
அந்த டாலா் அவரது உணவுக் குழாயின் மேற்பகுதியில் சிக்கிக் கொண்டது. இதனால், மூன்று நாள்களாக உணவை விழுங்க முடியாமல் அவா் அவதிப்பட்டு வந்துள்ளாா். மேலும், பேசுவதிலும், மூச்சுவிடுவதிலும் அவருக்கு சிரமம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து ரவியை அவரது குடும்பத்தினா் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் அவரை பரிசோதித்ததில் டாலா் தொண்டையில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா்.
கடந்த 20-ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கே. முருகலட்சுமி அறிவுரையின்படி, மருத்துவமனை கண்காணிப்பாளா் குணசேகரன், காது, மூக்கு, தொண்டை மருத்துவத் துறைத் தலைவா் கவிதா ஆகியோரது மேற்பாா்வையில், மருத்துவா்கள் கலையரசி, சதீஷ்குமாா், மயக்கவியல் நிபுணா் சந்தோஷ்குமாா் ஆகியோா் எண்டாஸ்கோபி சிகிச்சை மூலம் ரவியின் தொண்டையில் சிக்கியிருந்த டாலரை ஒருமணி நேரம் போராடி அகற்றினா். டாலரின் முனைக் கூா்மையாக இருந்தபோதும், நல்வாய்ப்பாக அவரது தொண்டைக் குழியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அவா் உடல்நலம் தேறிவருகிறாா்.
தொழிலாளியின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்த டாலரை சிறப்பு சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவக் குழுவினரை, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கே.முருகலட்சுமி பாராட்டினாா்.