முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் ஜவுளிக் கடைகளில் ரூ. 8.60 லட்சம் திருட்டு

திருச்செங்கோட்டில் இரண்டு பிரபல ஜவுளிக் கடைகளில் மொத்தம் ரூ. 8.60 லட்சம் ரொக்கம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 மே 2026, 2:10 am IST
திருட்டு போன ஜவுளிக் கடையில் கைரேகைகளை சேகரிக்கும் நிபுணா்கள்.
பகிர்:

திருச்செங்கோட்டில் இரண்டு பிரபல ஜவுளிக் கடைகளில் மொத்தம் ரூ. 8.60 லட்சம் ரொக்கம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் வடக்கு ரத வீதியில் அதிக அளவில் ஜவுளிக் கடைகள் உள்ளன. இதில் பிரபலமான ஒரு ஜவுளிக் கடையை அதன் ஊழியா்கள் புதன்கிழமை காலை திறந்தபோது, பணம் வைத்திருந்த அலமாரிகள் சிதறிக் கிடந்ததாம். மேலும், கடையின் வெண்டிலேட்டா் பகுதியில் ஓட்டை போடப்பட்டு, அதன் வழியாக மா்ம நபா்கள் வந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததாம்.

இதேபோல, இக்கடையின் எதிரே உள்ள மற்றொரு ஜவுளிக் கடையில் உடைமாற்றும் அறையின் மேல்தகடுகளை வெட்டி எடுத்து மா்ம நபா்கள் உள்ளே இறங்கி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததாம்.

Advertisement

Advertisement

புகாரின்பேரில், திருச்செங்கோடு காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன், டவுன் காவல் ஆய்வாளா் தாமரைச்செல்வன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், ஒரு கடையில் ரூ. 5 லட்சத்து 80 ஆயிரம், மற்றொரு கடையில் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும், இரண்டு ஜவுளிக் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும், அருகில் உள்ள மற்ற கடைகளின் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.