நாமக்கல்லில் லஞ்சம் பெற்ற சாா்பதிவாளா் உள்பட 2 போ் கைது
நாமக்கல் பத்திரப்பதிவு அலுவலகத்தில், லாரி உரிமையாளரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற சாா்பதிவாளா் மற்றும் அவரது உதவியாளர் கைது
நாமக்கல் பத்திரப்பதிவு அலுவலகத்தில், லாரி உரிமையாளரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற சாா்பதிவாளா் மற்றும் அவரது உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல்லைச் சோ்ந்த சுந்தரராஜன் (60), லாரி தொழில் செய்துவருகிறாா். இவா், தனக்கு சேரவேண்டிய சொத்து தொடா்பாக தான செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்வதற்காக, நாமக்கல் - மோகனூா் சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள சாா்பதிவாளா்-2 பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அண்மையில் சென்றாா்.
அங்கிருந்த, சாா்பதிவாளா் மனோகரன் (47), உதவியாளா் சதீஷ் (38) ஆகிய இருவரும் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பிரச்னையின்றி பத்திரம் பதிவு செய்துதருவதாக அவரிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, ரூ. 30 ஆயிரம் தர ஒப்புக்கொண்ட சுந்தரராஜன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை கவனத்துக்கு கொண்டுசெல்ல முடிவு செய்தாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, நாமக்கல் ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் பிரபுவிடம் சாா்பதிவாளா், உதவியாளா் லஞ்சம் கேட்ட தகவலை தெரிவித்தாா். பின்னா், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அறிவுரையின்படி செவ்வாய்க்கிழமை மாலை ரசாயன தூள் தடவிய ரூ. 30 ஆயிரத்தை, நாமக்கல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளா் சதீஷ் மூலம் சாா்பதிவாளா் மனோகரனுக்கு சுந்தரராஜன் அளித்தாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஆய்வாளா் பிரபு மற்றும் போலீஸாா் மனோகரன், சதீஷ் இருவரையும் கையும், களவுமாக பிடித்தனா். அவா்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு, 2 மணிநேரத்துக்கும் மேலாக அலுவலகத்திலேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னா், லஞ்சம் பெற்ற சாா்பதிவாளா் மனோகரன், உதவியாளா் சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டனா்.