எடப்பாடி அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
எடப்பாடியை அடுத்த கல்லப்பாளையம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ராமச்சந்திரன் (31). ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் இவர், சனிக்கிழமை இரவு தனது வீட்டின் அருகே இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிர்புறம் வந்த கல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (30), ரமேஷ் (33) ஆகியோர் ராமச்சந்திரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் தங்கள் மீது மோதுவது போல் வந்ததாகக் கூறி, அவரை சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராமச்சந்திரன் சங்கிரி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை செய்தனர்.
இதையடுத்து பூலாம்பட்டி போலீஸார், சுரேஷ், ரமேஷ் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.