ஆத்தூர் வசிஷ்ட நதிக் கரையில் வசித்து வரும் பொதுமக்கள் மாற்று இடம் கேட்டு, கோட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர் .
சேலம் மாவட்டம், ஆத்தூர் வசிஷ்ட நதிக் கரையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்றக் கோரி பொதுப்பணித் துறை சார்பில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மாற்று இடம் கேட்டு ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி, முன்னாள் நகர மன்றத் துணைத் தலைவர் அ.மோகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜி.முரளிசாமி, நரசிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.மணிவண்ணன், நரசிங்கபுரம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆத்தூர் கோட்டாட்சியர் ம.செல்வன் தலைமையில் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகே அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.