அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல்
தேவூர் அருகே அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற டிப்பர் லாரியை வருவாய் கோட்டாட்சியர் புதன்கிழமை பறிமுதல் செய்தார்.
தேவூர் அருகே அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற டிப்பர் லாரியை வருவாய் கோட்டாட்சியர் புதன்கிழமை பறிமுதல் செய்தார்.
தேவூர் அருகே சரபங்கா ஆற்றுப் பகுதியில் உரிய அனுமதியில்லாமல் மணல் எடுத்துச் செல்வதாக கோட்டாட்சியர் டி.ராமதுரை முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது தலைமையில் வட்டாட்சியர் கே.அருள்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் தேவூர் பகுதியில் வாகனத் தணிக்கை செய்தனர்.
இதில் குமாரபாளையம் ஈஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியில் அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வருவாய்த்துறையினர், டிப்பர் லாரியைப் பறிமுதல் செய்து தேவூர் போலீஸில் ஒப்படைத்தனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து டிப்பர் லாரி உரிமையாளருக்கு ரூ.26 ஆயிரத்து 400 அபராதம் விதித்தார்.