ஏற்காடு அடிவாரத்திலிருந்து பள்ளப்பட்டி ஏரியை சென்றடையும் வரட்டாறு ஓடையில் தடுப்புகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
ஏற்காடு வனப் பகுதிகளில் மழை பெய்து வரும் காரணத்தால் மழைநீர் ஏற்காடு அடிவாரத்திலிருந்து வரட்டாறு ஓடை மூலம் குருவம்பட்டி உயிரியல் பூங்கா, செட்டிச்சாவடி வழியாக பள்ளப்பட்டி ஏரியை சென்றடைகிறது.
இந்த ஓடையில் மாநகராட்சிக்கு எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வழிப் பாதைகளில் இருக்கும் தடுப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அஸ்தம்பட்டி மண்டலம், கோட்டம் எண் 16-இல் உள்ள மேம்பாலம் அருகில் தூர்வாரும் பணிகளை ஆணையாளர் சதீஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் கோட்டம் எண் 5 ல் உள்ள சின்னபுதூர், கோட்டம் 16-இல் உள்ள டி.வி.எஸ். பகுதிகளில் உள்ள வரட்டாறு ஓடையில் தடுப்புகளை அகற்றும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
ஓடைகளிலிருந்து தூர்வாரப்பட்ட கழிவுகளை வாகனங்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.
வரட்டாறு ஓடை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து, ஏரியை சென்றடையும் வரையிலான நீர்வழிப் பாதைகளை தினமும் ஆய்வு செய்யவும் பணியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர்கள் எம்.செந்தில், பி.கலைவாணி உள்பட பலர் உடனிருந்தனர்.