தனிநபர் கழிப்பிடம் கட்டியதில் மோசடி: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்
ஓமலூர் அருகே தனிநபர் கழிப்பிடம் கட்டியதில் செய்யப்பட்ட மோசடிகளை விசாரிக்கக் கோரி, பெரியேரிப்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
ஓமலூர் அருகே தனிநபர் கழிப்பிடம் கட்டியதில் செய்யப்பட்ட மோசடிகளை விசாரிக்கக் கோரி, பெரியேரிப்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிப்பட்டி கிராமத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டியதில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளதாக கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஓமலூர் வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனிநபர் கழிப்பிடம் கட்டாமலே கட்டியதாக மோசடிகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினர். மேலும், சேலம் மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்ற ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஓமலூர் வட்டாரம், பெரியேரிப்பட்டி கிராமத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகளில் இன்னும் தனிநபர் கழிப்பிடம் கட்டப்படமலேயே உள்ளன. இதனால், பெண்கள் குழந்தைகள் பலரும் திறந்தவெளியையே இன்றுவரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கழிப்பிடம் கட்டிவிட்டதாக கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.
எனவே, மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டப்படாமல் உள்ள வீடுகளுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், இந்த புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.