ஓமலூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 15 கிலோ புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் ஓமலூர் பேருந்து நிலையம், மேட்டூர் சாலை, தாரமங்கலம் சாலை பகுதியில் உள்ள சிறு கடைகளில் ஆய்வுகள் நடத்தி புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கடைக் காரர்களிடம் நடத்திய விசாரணையில், ஓமலூர் அருகேயுள்ள வேலகவுண்டனூர் பகுதியில் இருந்து மொத்த விற்பனையாளர் ஒருவர், ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் புகையிலைப் பொருள்களை கூடுதல் விலைக்கு விநியோகம் செய்வதை அறிந்தனர். இதையடுத்து, அங்கே சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், அங்குள்ள ஒரு குடோனில் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல்வேறு புகையிலைப் பொருள்கள் இருந்தன. மேலும், அங்கே ஆய்வு செய்த அதிகாரிகள் சுமார் 15 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். பள்ளி, கல்லூரிகள் அருகிலுள்ள கடைகளை குறிவைத்து இவர்கள் விற்பனை செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. அரசு தடை செய்துள்ள நிலையிலும், பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.