முகப்பு
சேலம்

சாக்கடை நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் மறியல்

சேலம் ஐந்து சாலைப் பகுதியில் சாக்கடை கலந்த மழை நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 9:18 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

சேலம் ஐந்து சாலைப் பகுதியில் சாக்கடை கலந்த மழை நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை  சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் ஐந்து சாலை ராம்நகர் பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் மழை பெய்யும் போது மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகிறது. இதனால் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வருகிறது. 
இந்த சாக்கடை நீர் வடியாமல் கால்வாய்களில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவி வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து சாக்கடை நீரை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ராம்நகர் பொதுமக்கள் ஐந்து சாலை பகுதியில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. 
இதுதொடர்பாக தகவலறிந்த அழகாபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அவர்களை பொதுமக்கள் சமரசம் செய்தனர். 
மழை நீர் தேங்காதபடி வழி வகை செய்வதாகவும், சாக்கடை மற்றும் கால்வாய்களில் அடைப்புகளை சரி செய்வதாகவும் உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.