தரமான உயர்கல்வியால் மட்டுமே வளர்ச்சியும், சமூக மாற்றமும் சாத்தியம்: பதிவாளர் மா.மணிவண்ணன்
நாட்டின் வளர்ச்சி, சமூக மாற்றம் தரமான உயர்கல்வியால் மட்டுமே சாத்தியமாகும் என்றார் பெரியார் பல்கலைக்கழப் பதிவாளர் மா.மணிவண்ணன்.
நாட்டின் வளர்ச்சி, சமூக மாற்றம் தரமான உயர்கல்வியால் மட்டுமே சாத்தியமாகும் என்றார் பெரியார் பல்கலைக்கழப் பதிவாளர் மா.மணிவண்ணன்.
பெரியார் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை சார்பாக சமூக மாற்றத்தில் உயர்கல்வியின் பங்கு: வாய்ப்பு வளமும், எதிர்காலமும் என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் மா.மணிவண்ணன் பேசுகையில், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் உயர்கல்வி வளர்ச்சியடைய வேண்டிய நிலையில் உள்ளது. நமது உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தனி மனிதனின் பண்பு, பழக்க வழக்கம், பண்பாடு போன்றவற்றில் மாற்றங்களைக் கொண்டு வர உயர்கல்வியால் மட்டுமே முடியும். எனவே உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தி உலகப் பல்கலைக்கழக வரிசையில் நம் பல்கலைக்கழகங்களை உயர்த்த வேண்டும். நாட்டின் வளமும், நலமும், சமூகத்தின் மாற்றமும் தரமான உயர்கல்வியால் மட்டுமே சாத்தியமாகும் என்றார்.
நிகழ்ச்சியில் காந்தி கிராம பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜி.பழனிதுரை பேசுகையில், தரமான, நிலையான வாழ்க்கைக்கும் தரமான கல்விக்கும் நேரடித் தொடர்பு உண்டு. கல்வியின் தரத்தை மேம்படுத்தவில்லை என்றால் சமூகம் சீரழிந்துவிடும். தரமான கல்வி என்பது உயர்கல்வியில் மட்டும் இருக்கக் கூடாது, அது தொடக்கக் கல்வியில் இருந்து தொடங்கப்பட வேண்டும். தனிநபரின் பண்பு நலன்களில் தொடங்கி சமூகம் வரை மாற்றம் பெற வேண்டுமெனில் கல்வியில் உரிய மாற்றங்களை, தரமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். வெளிநாடுகளில் கற்றலை மையப்படுத்திய கல்வி போதிக்கப் படுகிறது, ஆனால் நம் நாட்டில் கற்பித்தலை மையப்படுத்திய போதனை முறைக் காணப்படுகிறது. எனவே கல்வியின் தரத்தை உயர்த்த வில்லையெனில் மாற்றம் சாத்தியமில்லை என்றார்.
நிகழ்சிக்குத் கலைப்புல முதன்மையர் மேலாண்மைத் துறைத்தலைவர் பேராசிரியர் என். ராஜேந்திரன் தலைமை வகித்து பேசினார். கருத்தரங்கில் ஆட்சிக்குழு உறுப்பினர் கே. குமாரசாமி, ஆர். சுப்பிரமணிய பாரதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பேராசிரியர் வி. பழனிவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் டி.சாரதி, ஜெ. செந்தில் வேல்முருகன், பி.திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.