முகப்பு
சேலம்

சாயக்கழிவுகளால் கொங்கு பகுதியில்விவசாயிகள் பாதிப்பு: கொமதேக ஈஸ்வரன்

சாயக்கழிவு மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் கொங்கு பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல்

Updated On : 15 மே, 2018 at 2:37 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

சாயக்கழிவு மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் கொங்கு பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சேலம் தெற்கு மாவட்டத்தின் சார்பில், சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே புளியம்பட்டியில் அக் கட்சியின் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
சேலம் தெற்கு மாவட்ட அமைப்பாளர் பி. ராஜ்குமார், சேலம் கிழக்கு மாவட்டச் செயலர் டி.கே.எஸ். ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலர் இ.ஆர்.ஈஸ்வரன் இக்கூட்டத்தில் பங்கேற்று புதிதாக அக்கட்யின் இணைந்தவர்களுக்கு உறுப்பனர் அட்டைகளை வழங்கியும், புதிய நிர்வாகிகளை கௌரவித்தும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் பேசியது:-
அவினாசி அத்திக்கடவு திட்டம் செயல்படுத்த வேண்டும் என எங்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தீரன் சின்னமலைக்கு நினைவுச் சின்னம் அமைக்க போராடியதற்கு பிறகு சங்ககிரியில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு அவரது நினைவு நாளில் அரசு விழாவாக நடைபெற்று வருகின்றது.
கொங்கு பகுதியில் சாயக்கழிவு, தோல் நிறுவன கழிவுகளால் மண் விஷத்தன்மையாக மாறி வருகின்றன. விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் கொங்கு பகுதியில் புற்றுநோயால் அதிகம் பேர் உயிரிழந்து வருகின்றனர். முதற்கட்டமாக ஈரோட்டை சுற்றியுள்ள தோல்தொழிற்சாலைகளை அகற்ற வேண்டும் அல்லது சுத்திகரிப்பு செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி எங்கள் கட்சியின் சார்பில் மே 22ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடத்தில் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றார்.
மாநில துணைப் பொதுச்செயலர் பி.தங்கவேல், மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, மாநில விவசாய அணி துணைச் செயலர் டி.எஸ்.சந்திரசேகர், மாநில இளைஞரணி செயலர் எஸ்.சூரியமூர்த்தி ஆகியோர் பேசினர்.
சேலம் தெற்கு மாவட்ட செயலர் கே.திருமணன், துணை செயலர் கே.மாது, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.லோகநாதன், நிர்வாகிகள் எஸ்.நதிராஜவேல், எஸ்.வி.டி.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். தேவூர் நகர இளைஞரணி செயலர் எஸ்.சுரேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.