இளம் விஞ்ஞானிகளாக மாறும் மாணவர்கள் தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்காக உருவாக்க வேண்டும்: இஸ்ரோ துணைப் பொது மேலாளர்
இளம் விஞ்ஞானிகளாக மாறும் மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்க வேண்டும் என்று, இஸ்ரோ துணைப் பொது மேலாளர் கே.மலர்மணி தெரிவித்தார்.
இளம் விஞ்ஞானிகளாக மாறும் மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்க வேண்டும் என்று, இஸ்ரோ துணைப் பொது மேலாளர் கே.மலர்மணி தெரிவித்தார்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜி.விமலா ரோஸ்லின் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். அப்போது அவர் கூறியது:
உலக வங்கியால் நிதியளிக்கப்படும் தொழில்நுட்பக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.7 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு மற்றும் கற்பித்தல், கற்றல் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட உள்ளன. சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் ஆய்வுப் பணிகள், ஆசிரியர்களின் பணித்திறன் காரணமாக, ராய்ப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கான கற்றல்சார் ஒருங்கிணைப்பு மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொழில்நுட்ப பயிற்சித் திட்டத்தின் கீழ், சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் தைவான், ஜப்பான், மலேசியா நாடுகளுக்கு அரசின் செலவில் சென்று பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், கல்லூரியின் நீண்ட காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, 50 அறைகள் கொண்ட விடுதிக் கட்டடம் ரூ.6.50 கோடியிலும், உள் விளையாட்டரங்கம் ரூ.5.50 கோடியிலும் அமைத்திட அரசு அனுமதியளித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் வருமானம் கிடைக்கும் வகையில், 84.23 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், பெங்களூரு இந்திய விண்வெளி ஆய்வு மைய விண்கலப் பணிப் பிரிவு துணைப் பொது மேலாளர் கே.மலர்மணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 545 இளநிலைப் பட்டதாரிகள், 84 முதுநிலைப் பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியது:
பெற்றோரின் அர்ப்பணிப்பு உணர்வின் காரணமாக உயர்கல்வி இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. இந்தப் பட்டத்தை பெற்றவர்கள். இந்த நிலைக்கு காரணமானவர்களுக்கு நன்றி மிக்கவர்களாக இருக்க வேண்டும். உலகின் எதிர்காலத்தை உருவாக்கும் மிகப் பெரிய பொறுப்பும் கடமையும் இளைஞர்களிடம் உள்ளது. காத்திருந்து வீடுகளுக்கு தொலைபேசி கிடைத்த காலம் போய், நொடிப் பொழுதில் உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் முகத்தைப் பார்த்து பேசும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இளம் விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வளர்ச்சியை பொதுமக்களுக்காக உருவாக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், அரசு பொறியியல் கல்லூரி துணை முதல்வர் ஆர்.விஜயன், தேர்வாணையர் டி.ஷோபா ராஜ்குமார், பேராசிரியர்கள் சி.வசந்தநாயகி, வி.கீதா, பி.சுந்தரராஜ், ஆர்.விமலா, வி.ராஜ்குமார், ஏ .எம்.கல்பனா, எஸ்.லீமா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.