குழந்தையின்மைக்கு சூனியம் வைத்ததாக சந்தேகம்! ஜார்க்கண்டில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!
ஜார்க்கண்டில் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து...
ஜார்க்கண்டில், குழந்தையின்மைக்குத் தனக்கு சூனியம் வைத்ததாகக் கூறி 55 வயதான பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
தும்கா மாவட்டத்தின் டும்ராசோல் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்ஷி துடூ (வயது 35), இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் இதுவரை குழந்தை பிறக்காததால் அவரது மனைவி பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், தந்தையின் மரணம் உள்ளிட்ட தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த பக்கு ஹெம்ப்ரோம் எனும் 55 வயது பெண் தனக்கு சூனியம் வைத்து விட்டதாக முன்ஷி குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
மேலும், பக்கு ஹெம்ப்ரோமின் வருகை துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதாகவும், அவரைப் பார்ப்பதுகூடத் தனக்கு தோல்விக்கு வழிவகுக்கும் என்றும் முன்ஷி நம்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை (ஏப். 27) அன்று பக்கு ஹெப்ரோமிடம் பேச வேண்டுமெனக் கூறி அவரை தனது வீட்டுக்கு முன்ஷி அழைத்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த அந்தப் பெண்ணை கட்டைகளால் முன்ஷி தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில், பலத்த காயமடைந்த ஹெப்ரோம் சம்பவயிடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். தகவலறிந்து அங்கு விரைந்த முஃபாசில் காவல் துறையினர் தப்பியோட முயன்ற முன்ஷியை கைது செய்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மூடநம்பிக்கையால் அடித்துக்கொல்லப்பட்ட ஹெப்ரோமின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
மேலும், கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.