சேலம் மாவட்டத்தில் 251 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சேலத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை வெயில் தாக்கம் கடுமையாக இருந்தது.
இதனிடையே இரவு 9 மணிக்கு லேசான தூறல் மழை பெய்தது. சிறிது நேரத்தில் சேலம் நகரப் பகுதியில் கன மழை பெய்தது. நள்ளிரவு வரை சுமார் 3 மணி நேரம் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
அதேபோல மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, தம்மம்பட்டி, வீரகனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்)
சேலம் - 70, ஓமலூர்-59, காடையாம்பட்டி-48, வீரகனூர்-23, தம்மம்பட்டி-22, ஏற்காடு-15, கரியகோவில்-5, வாழப்பாடி-2, சங்ககிரி-3, எடப்பாடி-1 என மாவட்டத்தில் சுமார் 251 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.