ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை நீக்கியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது பிரிவை நீக்கியதைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமியர்களை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும், இஸ்லாமியர்களை தாக்குபவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் துறையில் முன் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட செயலாளர் சுல்தான் தலைமையிலான 55-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீஸார் கைது செய்தனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்: அதேவேளையில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது பிரிவை நீக்கியதைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா தலைமையில் தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காவல் துறை அனுமதியின்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அப்சர் அலி, நிர்வாகிகள் சையத் அலி, முகமது ரபி, ரிஜ்வான், பிலால் உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.