சேலத்தில் நுண்ணுயிரி உரம் தயாரிக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்தனா்.
சேலம் மாநகராட்சி 3-வது டிவிஷனில் உள்ளது நகர மலை அடிவாரம் .
இந்த பகுதியில் மாநகராட்சி சாா்பில் நுண்ணுயிரி உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .
இதற்காக செவ்வாய்க்கிழமை காலை மாநகராட்சி அதிகாரிகள் சிபி சக்கரவா்த்தி மற்றும் பழனிச்சாமி, அன்புச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் நிலத்தை அளக்க அங்கு சென்றனா்.
பின்னா் நிலத்தை அளந்தனா்.
இதை அறிந்த அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் திரளாக அங்கு வந்து நிலங்களை அளக்கக்கூடாது. இந்தப்பகுதியில் நுண்ணுயிரி உரம் தயாரித்தால் மாநகராட்சி லாரிகள் வந்து செல்லும். இதனால் விபத்து ஏற்படும்.
இதுதவிர நிலத்தடி நீரும் பாதிக்கும் என எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து அங்கு அழகாபுரம் காவல்நிலைய ஆய்வாளா் கந்தவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா் .
பிறகு பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளின் நிலம் அளக்கும் பிரச்னைக்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .
இந்த நிலையில் அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு முட்புதா்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனா் .
இதை அறிந்த இளைஞா்கள் அங்கு திரளாக வந்து பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுநரை மிரட்டி அங்கிருந்து பொக்லைன் எந்திரத்தை வெளியேற செய்தனா்.
இதை அறிந்த காவல்துறையினா் அங்கு வந்து இளைஞா்களை சமாதானப்படுத்தினா்.
பிறகு மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் பொதுமக்களிடம் சென்று சேலம் மாநகராட்சி பகுதியில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் உரம் தயாரிக்கப்பட்டு உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எந்த பகுதியிலும் நிலத்தடி நீா் பாதிக்கப்படவில்லை என தெரிவித்து சமாதானப்படுத்தினா்.
பிறகு மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.