ஏற்காட்டில் பணத்தகராறில் அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஏற்காடு செம்மநத்தம் ஊராட்சி செங்கலத்துப்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னமணியன் மகன் பாலகிருஷ்ணன். இவர், அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேலிடம் சில்வர் ஓக் மரம் தருமாறு ஓர் ஆண்டுக்கு முன் ரூ.3 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் மரம் தராததையடுத்து, பாலகிருஷ்ணன் பலமுறை தங்கவேலிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தராததால் இருவருக்கிமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, பாலகிருஷ்ணன் தனது வீட்டில் முகம் கழுவிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த தங்கவேல் அரிவாளால் பாலகிருஷ்ணனின் கழுத்தில் வெட்டியுள்ளார். காயமடைந்த பாலகிருஷ்ணன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து தங்கவேலை (55) கைது செய்தனர்.