பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்திமார்ச் 1 முதல் கறவை மாடுகளுடன் போராட்டம்: பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானம்
பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி, மார்ச் 1 முதல் கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்த தமிழ்நாடு
பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி, மார்ச் 1 முதல் கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் கறவை மாடுகளுடன் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சங்கத்தின் பொதுச் செயலாளர் முகமது அலி செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் தொடர்ச்சியாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பால் கொள்முதல் விலை இதற்கு முன்பாக 2014-இல் பசும்பாலுக்கு ரூ. 28-ம், எருமைப் பாலுக்கு ரூ. 35-ம் குறைந்தபட்ச கொள்முதல் விலையாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதற்கு பின் இதுவரை கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு மறுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட இதர விவசாய பொருள்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் கொள்முதல் விலையை உயர்த்தி குறைந்தபட்ச விலையை அறிவிக்கிறது. ஆனால் பால் கொள்முதலுக்கான விலையை உயர்த்தவில்லை. உயர்த்தினால் விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும். இதனால் ஆவின் விற்பனை விலையை உயர்த்தும் சூழ்நிலை ஏற்படும். விமர்சனம் ஏற்படும் என்பதற்காக அரசியல் லாபத்துக்காக பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு மறுத்து வருகிறது.
அந்த வகையில், பால் கொள்முதல் விலையை உயர்த்த விலயுறுத்தி மார்ச் 1 ஆம் தேதி முதல் கறவை மாடுகளுடன் கூட்டுறவுச் சங்கங்கள், ஒன்றிய அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என்றார்.