மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், நீர்த்தேக்கத்தில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ ஆலயக் கோபுரம் வெளியே தெரிகிறது. மேட்டூர் அணை கட்டப்பட்டபோது நீர்த்தேக்கப் பகுதியில் இருந்த நூற்றுக் கணக்கான கிராமங்களில் வசித்த மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது கிராமங்களில் இருந்த வழிபாட்டுத் தலங்களை அந்த மக்கள் சேதப்படுத்தாமல் அப்படியே விட்டுச் சென்றுவிட்டனர். இதில் பண்ணவாடியில் ஜலகண்டேசுவரர் ஆலயம், கிறிஸ்தவ ஆலயம், கீரைக்காரனூரில் சோழப்பாடி வீரபத்திரன் கோயில் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் நீர்த்தேக்கப் பகுதியில் மூழ்கின.
இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயரும்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் முற்றிலுமாக நீரில் மூழ்கிவிடும். நீர்மட்டம் 80 அடிக்கும் கீழாகச் சரியும்போது, இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றாக வெளியே தெரியத் தொடங்கும்.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடியாகச் சரிந்துள்ளதால், பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் நீரில் மூழ்கியிருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் ஒரு கோபுரம் சுமார் நான்கு அடி உயரத்துக்கு வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. அதைப் பார்ப்பதற்காக பண்ணவாடி பரிசல் துறையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதனால் பண்ணவாடி பரிசல்துறை சுற்றுலாத் தலம் போல காட்சியளிக்கிறது.