முகப்பு
சேலம்

வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி: கிராம மக்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

வாழப்பாடி அருகே வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற கொட்டவாடி கிராம மக்களுக்கு, வாழப்பாடி வனத் துறையினர் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Updated On : 24 ஜனவரி 2019, 4:41 am IST
பகிர்:

வாழப்பாடி அருகே வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற கொட்டவாடி கிராம மக்களுக்கு, வாழப்பாடி வனத் துறையினர் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் சின்னமநாயக்கன்பாளையம், ரங்கனூர், கொட்டவாடி உள்ளிட்ட கிராமங்களில், பொங்கல் பண்டிகையின் நிறைவு நாளான காணும் பொங்கலன்று, கிராமத்தையொட்டியுள்ள கரடு புறம்போக்கு, தரிசுநில புதர் பகுதியில் வலைவிரித்து வங்காநரி பிடிக்கும் கிராம மக்கள், நரியின் காலில் கயிற்றைக் கட்டி கிராமத்தின் மையத்திலுள்ள கோயில் மைதானத்தில் ஓடவிடுவது பாரம்பரிய விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
வனவிலங்கு பட்டியலில் வங்காநரி உள்ளதால், அதை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்த வனத்துறை தடை விதித்தது. மேலும், தடையை மீறி வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தினால், 7 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்தது.
இந்நிலையில், பாரம்பரிய விழாவை கைவிட மனமின்றி, வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற சின்னமநாயக்கன்பாளையம் மற்றும் ரங்கனூர் கிராம மக்களுக்கு வாழப்பாடி வனத்துறை அதிகாரிகள் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். இதனைத் தொடர்ந்து, வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்தில் வங்காநரி பிடித்து புதன்கிழமை ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற 10 பேரை, வாழப்பாடி வனச்சரகர் பரமசிவம் தலைமையிலான வனத் துறையினர் பிடித்தனர். இதுகுறித்து வனத் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.