ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதிகளில் பாஜக சார்பில் புதன்கிழமை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் பகுதிகளில் நகராட்சி சார்பில் 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பொன்.கெளதமசிகாமணி தனது சொந்த நிதியில் நகராட்சிப் பகுதிகளில் டிராக்டர் மற்றும் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்து வந்தார். இதனையடுத்து, அதிமுக, ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பிலும் குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். இந்நிலையில், புதன்கிழமை பாஜக சார்பில் ஆத்தூர் நகராட்சி 9-ஆவது வார்டிலும், நரசிங்கபுரம் நகராட்சியில் 3-ஆவது வார்டிலும் குடிநீர் விநியோகத்தை பாஜக விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஜெயஆனந்த், மாவட்டத் தலைவர் மாணிக்கம், மாவட்டச் செயலர் தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலர் கார்த்திகேயன் மற்றும் நகரத் தலைவர்கள் செய்தனர்.