நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றக்கூடிய தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சிக்கு நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், நாமக்கல் மாவட்ட ஆட்சியருமான மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். அப்போது, மண்டல அலுவலர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு சரிபார்த்தல், வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லுதல், வாக்குச் சாவடியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆட்சேபணை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவது குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும், மக்களவைத் தேர்தலில் ஒரு வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் மாதிரி கருவிகள் முதன்முறையாக பொருத்தப்படுவதால், அதன் செயல்முறை விளக்கம் மற்றும் பராமரிக்கப்படும் விதம் பற்றியும், வாக்குப்பதிவுகள் முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்துச் செல்லுதல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆட்சியர் செயல்முறை விளக்கத்துடன் கூறினார். இதில் சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 124 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றக்கூடிய 26 தேர்தல் மண்டல அலுவலர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி உதவித் தேர்தல் அலுவலரான சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம், சங்ககிரி வட்டாட்சியர் கே.அருள்குமார், சங்ககிரி தேர்தல் துணை வட்டாட்சியர் சிவராஜ், வருவாய் ஆய்வாளர்கள் கவிதா, ராஜாராமன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.