தம்மம்பட்டியில் மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அடுத்து சுகாதாரப் பணியாளர்கள், அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்மம்பட்டி 3 -ஆவது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் வசிக்கும் 7-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தம்மம்பட்டிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இப்பகுதியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி உத்தரவின் பேரில், தம்மம்பட்டி வட்டார தலைமை மருத்துவ அலுவலர் வேலுமணி தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஜமால் முகமது உள்ளிட்ட சுகாதார குழுவினர் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தம்மம்பட்டி பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களும், டெங்கு தடுப்பு ஊழியர்களும் வீடுவீடாக புகை மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல், சாக்கடை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.