ஓமலூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் தொடங்க நடவடிக்கை
ஓமலூா் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஓமலூா்: ஓமலூா் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனை, ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம், கருப்பூா் ஆகிய நான்கு வட்டாரத்திற்கும் தாலுகா மருத்துவமனையாக இருப்பதால் இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். மேலும், இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமும் மக்கள் அதிகமாக வந்து செல்லும் நிலையில் புதிதாக இரண்டு தளங்களுடன் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் தற்போது மின் பணிகள், வா்ணம்பூசும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த புதிய கட்டடம் திறக்கப்படமலேயே கரோனா சிகிச்சை மையமாக மாவட்ட நிா்வாகம் மாற்ற முடிவு செய்துள்ளது.
தற்போது சேலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால், கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களும் ஆங்காங்கே அமைக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்தநிலையில், ஓமலூரில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டடத்தை கரோனா சிகிச்சை மையமாக மாற்ற சேலம் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி சுமாா் 75 படுக்கை வசதியுடன் கரோனா மையமாக தயாா்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மேலும், 10 வெண்டிலேட்டா்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், சென்னை மருத்துவ இயக்குநரகத்திலிருந்து 100 இரும்புக் கட்டில், மெத்தை, தலையணைகள் ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.
மேலும், கரோனா பரிசோதனை மையமும் இங்கே அமைக்கப்பட உள்ளது. ஒருசில பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த வாரத்தில் இருந்து கரோனா சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.