ஆந்திரத்தில் கோர விபத்து: லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் பலி!
ஆந்திரத்தில் வியாழக்கிழமை அதிகாலை டிப்பர் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய கோர தீ விபத்தில் 13 பேர் பலியானது குறித்து...
ராயவரம்: ஆந்திரம் மாநிலம், மார்காபுரம் மாவட்டம் ராயபுரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை டிப்பர் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய கோர தீ விபத்தில் 13 பேர் பலியாகினர் மற்றும் சுமார் 18 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திரம் மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து பாமூர் நோக்கி சென்ற தனியார் பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று மார்காபுரம் மாவட்டம் ராயபுரம் கல்குவாரிகள் அருகே வியாழக்கிழமை அதிகாலை டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்து தீப்பிடித்து எரிவதை அறிந்த பயணிகள் சிலர் பேருந்து கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே குதித்து உயிர்தப்பிய நிலையில் 13 பேர் உயிருடன் பேருந்து தீயில் சிக்கி பலியாகினர்.
லேசான காயங்களுடன் உயிர்தப்பிய 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன என்று மார்காபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜு ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பேருந்து தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், அவர்களது உறவினர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றன, சரிபார்ப்பு முடிந்தவுடன் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
விபத்தைத் தொடர்ந்து தீப்பிடித்த பேருந்தினுள் சில உடல்கள் இன்னும் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நாகராஜு கூறினார்.
இதற்கிடையில், அந்த மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு இந்த விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்ததோடு, உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.