கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: 20 பேர் காயம்
கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது புதன்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து விபத்து குறித்து...
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது புதன்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து மோதியதில் 20 பேர் காயமடைந்தனர்.
கோவையிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நாகர்கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூப்பன்ப்பட்டி விலக்கு அருகே புதன்கிழமை அதிகாலை சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு சிமென்ட் கலவை டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தை உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் ஓட்டிச் சென்றார்.
இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் சரவணன், பெண் பயணிகள் 8 பேர் மற்றும் ஒரு குழந்தை உள்பட 20 பேர் கையமடைந்தனர். பேருந்தின் முன்பகுதி முழுமையாகச் சேதமடைந்தது.
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் வாகனத்தின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த பேருந்து ஓட்டுநரை மீட்டனர்.
காயமடைந்த பயணிகள் அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவில்பட்டி கிழக்குக் காவல் நிலையக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.