வாழப்பாடி அருகே விவசாய நிலத்தில் புதையல் கிடைத்ததா? வருவாய்த்துறை, காவல்த்துறையினர் தீவிர விசாரணை
வாழப்பாடி அருகே தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டிய போது, விவசாயி குடும்பத்தினருக்கு புதையல் கிடைத்ததாக தகவல் பரவியது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில்
வாழப்பாடி அருகே தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டிய போது, விவசாயி குடும்பத்தினருக்கு புதையல் கிடைத்ததாக தகவல் பரவியது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், வாழப்பாடி வருவாய் துறையினர் மற்றும் காவல்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சி ரங்கனூர் கிராமம் எருமைச்சாட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஒருவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர், கூட்டாக விவசாயம் செய்து வரும் மூவரும் சேர்ந்து, பயிர் பாசனத்திற்கு தண்ணீர் தேக்கி வைப்பதற்காக, அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு, கடந்த வியாழக்கிழமை பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது, பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் இருந்து, விவசாயி குடும்பத்திற்கு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள புதையல் கிடைத்ததாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது.
இதுகுறித்து, இப்பகுதி மக்கள் வாழப்பாடி வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வட்டாட்சியர் ஜானகி அறிவுறுத்தலின் பேரில் பேளூர் வருவாய் ஆய்வாளர், குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை ஆகியோர், புதையல் கிடைத்ததாக கூறப்படும் விவசாயி தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டு, நில உரிமையாளர்களான விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்களுக்கு புதையல் ஏதும் கிடைக்கவில்லை என கூறிய விவசாயிகள், முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடு்த்து, புதையல் எடுத்ததாக கருதப்படும் விவசாயிகள் மூவரிடமும் உரிய விசாரணை நடத்தி, உண்மையை கண்டறியுமாறு, குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை, திங்கட்கிழமை வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர், சந்தேகத்திற்குரிய விவசாயிகளிடமும், இப்பகுதி பொதுமக்களிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தொடர் விசாரணைக்குப் பிறகே, விசாயிகளுக்கு புதையல் கிடைத்ததா? அல்லது வெறும் வதந்திதானா? என்பது குறித்த உண்மை தெரியவருமென வாழப்பாடி காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாழப்பாடி பகுதியில் நிலத்தை தோண்டிய விவசாயிகளுக்கு முதன் முறையாக, புதையல் கிடைத்து இருப்பதாக வெளியான தகவல், இப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.