கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் பெரும்நட்டத்திற்குள்ளான வெள்ளரி விவசாயம்
சேலம்மாவட்டம் தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் வெள்ளரிக்காய்கள் பயிரிட்ட விவசாயிகள் பெரும் நட்டத்திற்குளாகியுள்ளனர்.
சேலம்மாவட்டம் தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் வெள்ளரிக்காய்கள் பயிரிட்ட விவசாயிகள் பெரும் நட்டத்திற்குளாகியுள்ளனர்.
கோடைகாலத்தில் வெள்ளரிக்காய்களின் வரத்து மிகவும் அதிகமாக இருக்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும்,உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தவல்லது வெள்ளரிக்காய்கள். அதனால் இதனால் விவசாயிகள் ஜனவரி மாதத்திலிருந்தே பயிரிடுவது வழக்கம்.90 நாள்களுக்குப்பிறகு, அறுவடை துவங்கும். அறுவடை செய்யப்பட்டவெள்ளரிக்காய்களை, வியாபாரிகள் மொத்தமாக குத்தகைக்கு பேசி, தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அதனை, விற்பனைக்கு கொண்டுவருவது வழக்கம். நடப்பு ஆண்டும், தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலை, கவுண்டம்பாளையம், ஜங்கமசமுத்திரம் உள்ளிட்டபகுதிகளில் வெள்ளரிக்காய்களை, விவசாயிகள் பயிரிட்டனர்.
அவைகள் மகசூல் வரும் நேரத்தில் மார்ச் இறுதிவாரத்தில், அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், வெள்ளரிக்காய்கள் பயிரிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வெள்ளரிக்காய்களை வெளியூர்களுக்கு அனுப்ப இயலவில்லை. உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யவும் முடியவில்லை. கோடை வெயிலில் வெள்ளரிக்கொடிகள் காய்ந்தும்போய்விட்டன. அவைகளை விற்க முடியாததால், கிலோக்கணக்கில் வெள்ளரிக்காய்களை அக்கம்பக்கத்தினர்க்கும், மாடுகளுக்கு தீவனமாகவும் கொடுக்கும் நிலை இந்த ஊரடங்கில் ஏற்பட்டது.
இதுகுறித்து கெங்கவல்லி அருகே கவுண்டம்பாளையத்தில் வெள்ளரி விவசாயம் செய்த விவசாயிகள் கூறியதாவது, சென்ற வருடம் ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.10 முதல் ரூ.11 வரை விற்பனை செய்தோம். அதனை வியாபாரிகள் இங்கேயே வந்து உடனடியாக ரொக்கம் கொடுத்து வாங்கிச்சென்றனர். ஆனால் இந்த ஆண்டோ, அதற்கு நேர்மாறாக இருந்துவிட்டது. வியாபாரிகள் வரவில்லை. எங்களால் விற்கவும் முடியவில்லை. அதனால் எங்கள் மாடுகளுக்கும், அக்கம்பக்கத்துவிவசாயிகளின் மாடுகளுக்கும், உணவாக கொடுத்து காலிசெய்தோம்.
பல மருத்துவ குணமுள்ள வெள்ளரிக்காய்கள், எங்களுக்கு பெரும் நட்டத்தினை ஏற்படுத்திவிட்டது. அதனால் நாங்கள் பயிரிட்டுள்ள வெள்ளரிவயல்களில் பாதிக்கும் மேல் அழித்துவிட்டோம். மிகவும் சொற்ப பரப்பளவிலேயே வெள்ளரி வயலை வைத்துள்ளோம். சீசன் பொருட்களை விளைவித்ததால் நாங்கள் பெரும்நட்டத்திற்குள்ளாகிவிட்டோம். இனிவரும் காலங்களில் எப்போதும் வைத்திருந்து விற்கும் தானியவகைகளை விளைவிக்க முடிவு செய்துவிட்டோம். காய்கறிகள் அத்தியாவசியம் என்பதால் மக்கள் வாங்கிச்செல்கின்றனர். ஆனால் வெள்ளரிக்காய்கள் அவ்வாறு அல்ல என்றனர்.