மயான பாதை வேண்டி மக்கள் சாலை மறியல்
சேலம் அருகே கருங்கல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த மக்கள் மயான பாதை வேண்டி ஞாயிற்றுக்கிழமை சடலத்துடன் சாலை மறியல் செய்தனர்.
சேலம் அருகே கருங்கல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த மக்கள் மயான பாதை வேண்டி ஞாயிற்றுக்கிழமை சடலத்துடன் சாலை மறியல் செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ளது கருங்கல்லூர் காந்தி நகர். இங்கு 30- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காந்தி நகரைச் சேர்ந்த குப்புசாமி (வயது 60) என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.
அவரது சடலத்தைக் கொண்டு செல்ல மயான பாதை வேண்டி மேட்டூர், மைசூர் சாலையின் குறுக்கே காந்தி நகரில் சடலத்தை வைத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், வருவாய்த் துறை ஆவணங்களை சரிபார்த்து மயான பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக மேட்டூர் - மைசூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.