ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த ஐந்து மாதங்களாக சுற்றுலாப் பகுதிகள், அரசு பூங்காக்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு பல தளா்வுகளை அறிவித்தது. இதையடுத்து, புதன்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலில் ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் தோட்டக்கலைத் துறை பராமரிப்பில் உள்ள அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஐந்தினை பூங்கா, ஏரி பூங்கா, வனத்துறையின் மான் பூங்கா, கரடியூா் காட்சி முனை, படகு இல்லம் ஆகியவை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதனால், கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வழக்கமாக வார விடுமுறையில் அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகள், தற்போது சுற்றுலாப் பகுதிகளுக்கான தடை நீங்கியதையடுத்து, வார நாள்களிலும் அதிக அளவில் வருகை புரிகின்றனா்.
கடந்த ஐந்து மாதங்களாக படகு ஏரியில் படகுகள் செல்லாததால், ஏரியில் ஆகாயத் தாமரை படா்ந்து படகுகள் செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே, ஏரியில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.