வாழப்பாடி: கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து தனியார் நிறுவன ஊழியரைத் தாக்கி கொள்ளை
வாழப்பாடி புதுப்பாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியாக இருக்கும் பங்களாவிற்குள் நேற்று நள்ளிரவு புகுந்த முகமூடி கொள்ளையர்கள், தனியார் நிறுவன ஊழியரை தாக்கி
வாழப்பாடி புதுப்பாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியாக இருக்கும் பங்களாவிற்குள் நேற்று நள்ளிரவு புகுந்த முகமூடி கொள்ளையர்கள், தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கத்திமுனையில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(35). தனியார் மருந்து நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே இவரது தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி குடும்பத்தோடு வசித்து வருகிறார். நேற்றிரவு வழக்கமான பணிகளை முடித்து விட்டு குடும்பத்தோடு தூங்கியுள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டுக்கதவை கல்லால் தாக்கி உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள், சந்திரசேகரை தாக்கி, கத்திமுனையில் இவரது மனைவி கண்மணி (31), தாயார் ராஜாமணி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தாலி, சங்கிலிகளையும் பறித்துக் கொண்டனர்.
வீட்டில் வைத்திருந்த தங்க நகைகளையும், சந்திரசேகரின் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, செல்போன் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர. இச்சம்பவம் வாழப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பு, வாழப்பாடி உதவி காவல் கண்காணிப்பாளர் வேலுமணி, வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முகமூடி கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்க மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அவர்களுக்குள் ஹிந்தி மொழியில் பேசியுள்ளனர். தமிழில் நன்றாக பேசிய கொள்ளையர்கள், வீட்டு உரிமையாளர் சந்திரசேகரிடம், உனக்கு உயிர் வேண்டுமெனில் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக்கொடுத்து விடுவென கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இல்லையெனில் உன்னையும், உனது குடும்பத்தினரையும் கல்லை தூக்கிப் போட்டு கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். தனக்கு உயிர்தான் முக்கியம், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். என்னையும், என் குடும்பத்தையும் உயிரோடு விட்டுச் செல்லுங்கள் என தனியார் நிறுவன ஊழியர் கதறியுள்ளார்.
இதனையடுத்து தனியார் நிறுவன ஊழியரையும், அவரது குடும்பத்தினரையும் விட்டுவிட்டு, வீட்டிலிருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து கொண்டு அங்கு தப்பிச் சென்றுள்ளனர்.